பின்னடைவான கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான கிராமிய வீட்டு ஆடு வளர்ப்புத்திட்டம் – 2020.12.31

பின்தள்ளப்பட்ட கிராமங்களில் வாழும் மக்கள் தாம் வாழும் சூழலில் தமக்கு பொருத்தமான சுயதொழிலை உருவாக்கி தமது வாழ்வாதாரத்தை தாமே வெற்றிகொள்வதற்கான வசதிகளும் வாய்ப்புகளும் அற்றவர்களாக காணப்படுகின்றனர்.

பின்தங்கிய அபிவிருத்தியடைவினை எதிர்நோக்கியுள்ள கிராமப்புறங்களில் காணப்படுகின்ற மக்கள் சமூக முறண்பாடுகளிலிருந்து விடுபட்டு உயர் வாழ்க்கைத்தரத்தை உருவாக்கிக் கொடுக்கும் நோக்கத்துடன் பின்தங்கிய கிராமிய பிரதேச அபிவிருத்தி, வீட்டுக் கால்நடை அபிவிருத்தி திட்டத்தை வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணியுடன் இணைந்து
பின்தங்கிய கிராம பிரதேச அபிவிருத்தி, வீட்டுக்கால்நடை வளர்ப்பு மற்றும் சிறு பொருளாதார பயிற் செய்கை அபிவிருத்திக்கான இராஜாங்க அமைச்சின் கௌரவ இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் வாழ்வாதாரத்திற்காக சுயதொழிலை எதிர்பார்த்து காத்திருக்கின்ற குடும்பங்களில் எமது பிரதேச செயலக பிரிவில் வசிக்கும் 47 குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு நிலைபேறான வருமானத்தை பெற்றுக்கொடுக்கும் முகமாக ஆடுவளர்ப்பிற்காக அவர்களுக்கு இன்று (2020.12.31) எமது பிரதேச செயலகத்தில் ஆடுகள் வழங்கப்பட்டன.

இந் நிகழ்வானது உரிய சுகாதார நடைமுறைகளை பின்பற்றி எமது பிரதேச செயலாளர் திருமதி.சிவப்பிரியா வில்வரத்னம் தலைமையில் கால்நடை வைத்திய அதிகாரி, பிரதி திட்டமிடல் பணிப்பாளர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சரின் இணைப்பாளர்களும் பங்குபற்றி பொதுமக்களுக்கான ஆடுகளை வழங்கி வைத்தனர்.

இதன்போது பிரதேச செயலாளர் உரையாற்றும்போது மக்கள் தங்களது பொருளாதாரத்தை தாமே உயர்த்திக்கொள்ளும் நோக்கில் செயற்பட வேண்டும் என்றும் COVID 19 சூழ்நிலையிலும் மக்களுக்கான பொருளாதாரத் தேவையினை அவர்களே ஈட்டிக்கொள்ள முயலவைக்கும் நோக்கில் கௌரவ இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் அவர்களின் விசேட நிதி ஒதுக்கீடு, வேண்டுகோளின் பேரில் இத்திட்டம் எமது எமது மாவட்டத்தில் அமுல்படுத்தப்பட்டது எனவும் கால்நடை வைத்தியர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சரின் இணைப்பாளர்கள் போன்றோர் மிகவும் சிரமத்திற்கு மத்தியில் ஆடு வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதாகவும் அதன் மூலம் பயன் பெறுகின்ற மக்கள் புரிந்துணர்வுடன் செயற்பட்டு தங்களது வாழ்க்கைத்தரத்தை உயர்த்திக்கொள்ள வேண்டுமென பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.

பொதுவாக ஆடுகள் 15 முதல் 18 ஆண்டுகள் உயிர்வாழ்வதோடு அவற்றின் மூலம் இறைச்சி, பால் போன்ற உற்பத்திகளை பெறமுடியும் என்பதோடு தற்போதைய மழையுடனான காலநிலை காரணமாக ஆடுகளுக்கு குளிர் மூலமாக ஈர்ப்பு வலிகள் அல்லது வேறு நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளதனால் மிகவும் கண்காணிப்புடன் பயனாளர்கள் ஆடுகளை பராமரிக்க வேண்டும் என்பதோடு நோய்த் தாக்கங்கள் ஏதும் ஆடுகளுக்கு ஏற்பட்டால் உடன் கால்நடை வைத்தியர் அலுவலகத்தை நாடும்படி கால்நடை வைத்திய அதிகாரி அவர்கள் பொதுமக்களுக்கு விளக்கமளித்தார்.

விவசாயிகளுக்கு அதிகளவில் கைகொடுத்து வருவது ஆடு வளர்ப்புதான். கொஞ்சம் சிரமமான தொழில் என்றாலும் செல்வம் கொழிக்கும் தொழில். சொந்த இடம், கால்நடைத் தீவனம் உற்பத்தி செய்ய வசதி வாய்ப்புகள் உள்ளவர்களுக்கு ஏற்ற தொழில் இது. நன்கு திட்டமிடல், நோய் தடுப்பு போன்றவற்றில் அதிக கவனம் செலுத்தினால் இலாபகரமான தொழில்தான் ஆடு வளர்ப்பு.
மேட்டுப்பாங்கான, நிலங்களில் பசுக்களையும், எருமைகளையும் வளர்க்க இயலாது. எனவே இத்தகைய சூழலுக்கு ஆடுவளர்ப்பு உகந்தது.

ஆடு வளர்ப்பில் குறைந்த முதலீட்டைக் கொண்டு நல்ல லாபம் பெறலாம்.
ஆடு வளர்ப்பு அனைத்துச் சூழலுக்கும் ஏற்றதாகும்.
அதிகப் பராமரிப்பு தேவையில்லை. சிறிய இடம் மற்றும் எளிய கொட்டகை போதுமானது.
குறைந்த முதலீடு மற்றும் உடனடி வருவாய்.
ஆட்டிலிருந்து பால் மற்றும் கறி ஆகிய இரண்டிலிருந்தும் வருமானம் கிடைக்கிறது.
ஒரு ஆட்டிலிருந்து சராசரியாக 22-30 கிலோ கறி கிடைக்கின்றது.
அனைத்து விதமான மக்களும் உண்ணக் கூடிய இறைச்சி.
அதிகமான குட்டிகளை ஈனும் விகிதம். ஒவ்வொரு முறையும் சராசரியாக 2-3 குட்டிகளை ஈனுகிறது.
நல்ல எரு கிடைக்கிறது, இதன் மூலம் விவசாயத்தினையும் மேற்கொள்ள முடியும்.
வருடம் முழுவதும் வேலை.
போன்றவை ஆடு வளர்ப்பின் நன்மைகளாக அமைகின்றதெனலாம்.



