ஒரு லட்சம் வேலைவாய்ப்பு நிகழ்ச்சி திட்டத்திற்கு உள்வாங்கப்படுபவர்களுக்கான நேர்முக தேர்வு - 2021.03.03

அதிமேதகு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவின் நாட்டை கட்டியெழுப்பும் "சுபீட்சத்தின் நோக்கு" எண்ணக்கருவிற்கு அமைய பல்நோக்கு அபிவிருத்தி செயலணி திணைக்களத்தின் கீழ் ஒரு லட்சம் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ்மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக பிரிவில் உள்வாங்கப்படவிருக்கும் குறைந்த வருமானத்தை ஈட்டுகின்ற குடும்பத்தினை கொண்ட நபர்களினை தெரிவு செய்வதற்கான (3ம் கட்டமான) நேர்முக தேர்வானது இன்று பிரதேச செயலக ஒன்றுகூடல் மண்டபத்தில் பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னம் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இந் நேர்முகத்தேர்வில் உதவிப் பிரதேச செயலாளர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர், நிருவாக உத்தியோகத்தர், சமூக சேவை உத்தியோகத்தர் மற்றும் கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் போன்றோர் நேர்முக தேர்வாளர்களாக பங்கு பற்றினர்.


எமது பிரதேச செயலக பிரிவில் விண்ணப்பித்த 32 விண்ணப்பதாரிகள் நேர்முக தேர்வுக்கு உட்படுத்தப்பட்டனர் . குறைந்த வருமானத்தினை ஈட்டுகின்ற குடும்பத்தை சேர்ந்தவர்கள் பொருளாதார ரீதியில் ஒரு முன்னேற்றகரமான நிலையினை அடைந்து தமது வாழ்க்கைத்தரத்தினை உயர்த்திக் கொள்ள வேண்டுமென்பதினை மையப்படுத்தி தொழில் தேடுநர்களாக தொழிலொன்றினை எதிர்பார்த்து காத்திருக்கும் இளைஞர்களுக்கு பயன்தரும் திட்டமாக ஜனாதிபதியின் இத் திட்டம் அமைகிறது.
வருமானம் ஒன்று வாழ்க்கைத்தரத்தின் மேம்பாட்டிற்கான ஒரு ஆதாரமாக அமைகின்றது. வருமானமின்மை காரணமாகவே குடும்பங்கள் பல்வேறான பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலை ஏற்படுகின்றது. நிரந்தர வருமானமொன்றினை குடும்பமொன்று ஈட்டிக்கொள்ளும் சந்தர்ப்பத்தில் அக் குடும்பமானது ஒரு பொருளாதார முன்னேற்றத்தினை எட்டமுடியும்.
நேர்முக தேர்வில் பங்குபற்றிய விண்ணப்பதாரிகளின் தகமைகள் மற்றும் அவர்களது குடும்பப் பின்னணி பரிசீலிக்கப்பட்டதோடு அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தொழிற்துறை சார் விளக்கங்களும் அவர்களுக்கு வழங்கப்பட்டது.





