சீரற்ற காலநிலையினை எதிர்கொள்வது தொடர்பான
அவசர மற்றும் விசேட கூட்டம் - 2020.12.02

மாவட்டத்தில் நிலவுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக அவசர மற்றும் விசேட கூட்டமானது இன்று (2020.12.02) எமது பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் திருமதி. சிவப்பிரியா வில்வரத்னம் தலைமையில் இடம் பெற்றது.

இக் கூட்டத்தில் உதவி பிரதேச செயலாளர், உதவி திட்டமிடல் பணிப்பாளர், மேலதிக சுகாதார வைத்திய அதிகாரி, பொலிஸ் பொறுப்பதிகாரி, சிரேஸ்ட பொது சுகாதார பரிசோதகர், இராணுவ மற்றும் விசேட அதிரடிப்படை பொறுப்பதிகாரிகள், உதவிக் கல்விப் பணிப்பாளர் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது நாட்டில் நிலவுகின்ற சீரற்ற காலநிலையினை எவ்வாறு எதிர் கொள்வது, பொது மக்களுக்கு எவ்வாறான அறிவுறுத்தல்களை வழங்குவது, எவ்வாறான முன்னாயத்த நடவடிக்கைகளை மேற்கொள்வது என்பது தெடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றது.

Covid 19 சூழ்நிலையும் அபாயமானதொன்றாக காணப்படுகின்ற காரணத்தினால் சீரற்ற காலநிலையின்போது பொதுமக்களை ஒன்றாக கூட்டமாக ஒருங்கிணைத்து பாதுகாக்கின்ற நிலைமையானது பாரியதொரு சிக்கலை ஏற்படுத்தக்கூடியது என்பதால் மக்கள் தங்களைத் தாமே பாதுகாப்பதற்கும் அனர்த்த சூழலை எதிர் கொள்வதற்கும் எவ்வாறான செயற்பாடுகளை பின்பற்றி செயற்பட வேண்டும் என்பது தொடர்பான தீர்மானமிக்க பல முடிவுகள் எடுக்கப்பட்டன.
அந்த வகையில்,
- சூறாவளிக்கு முன்னரான முன்னாயத்தங்களாக பொது மக்கள் வீட்டுக்கூரை, சுவர் என்பன உறுதியானவையா என்பதனை சரிபார்த்துக் கொள்வதோடு உறுதியற்றதாக காணப்படும் சந்தர்ப்பத்தில் உறுதியான கட்டிடங்களுள்ள உறவினர், நண்பர்கள் வீட்டுக்கு செல்வது பொருத்தமானது .
- வீட்டுக்கு வெளியே உயரமான மரங்கள் காணப்படின் அவற்றினை வெட்டி அகற்றுவதானது பாதுகாப்பானதொரு நடவடிக்கையாகும்.
- கடல் கொந்தளிப்பு, வெள்ளப்பெருக்கு போன்ற சூழ்நிலைகளிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள மக்கள் கடலுக்கு அருகாமையில், தாழ்வான பகுதியில் இருந்து வெளியேறி பாதுகாப்பான உறவினர், நண்பர்கள் வீட்டிற்கு சென்று பாதுகாப்பு பெறுதலே சிறந்தது.
- தூய தண்ணீரை தூக்கிச் செல்லக்கூடிய கொள்கலன்களில் சேமித்து வைத்துக்கொள்வதென்பது மிகவும் அவசியமானதொன்றாக காணப்படுவதினால் அனைவரும் அதனை பின்பற்றவேண்டிய தேவை உள்ளது.
- மீனவர்கள் தங்களுடைய மீன்பிடி படகுகள், உபகரணங்கள் போன்றவற்றை கடல் மட்டத்திலிருந்து குறைந்தது 50 மீட்டர் தூரத்துக்கு அப்பால் சென்று பாதுகாப்பாக வைத்துக்கொள்வதானது சிறந்ததொரு பாதுகாப்பு நடவடிக்கையாகும்.
- சூறாவளி வீச ஆரம்பிக்கும் சந்தர்ப்பங்களில் சகலவித மின்சார தொடர்புகளையும் துண்டித்து விடுவதானது மின்சாரத்தினால் ஏற்படக்கூடிய ஆபத்தை குறைக்க ஏதுவானதாக அமையும்.
- பெறுமதியான பொருட்கள், ஆவணங்கள் போன்றவற்றை மிகவும் பாதுகாப்பாக வைத்துக்கொள்வதானது பெறுமதியான பெருள் இழப்புக்களை குறைக்க ஏதுவானதாக அமையும்.
- காற்று வேகமாக வீசும்போது வீட்டின் கதவு, யன்னல்களை திறந்து வைப்பதானது வீட்டுக்கு ஏற்படக்கூடிய பாதுகாப்பினை குறைத்துக் கொள்ள ஏதுவானதொன்றாக அமையும்.
- குழந்தைகள், வயோதிபர்கள், விசேட தேவையுடையவர்களை முற்கூட்டியே பாதுகாப்பானதொரு அமைவிடத்தில் அமர்த்திவைப்பது சிறந்ததொரு செயற்பாடாகும்.
- அபாய வலயத்திற்குள் உட்பட்டு காணப்படுகின்ற தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள குடும்பத்தினர் ஒரு பாதுகாப்பான இடத்திற்கு மாற்றுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
பொதுமக்கள் தங்களைத் தாமே பாதுகாத்துக் கொள்ள வேண்டிய தேவை காணப்படுவதினால் பாதுகாப்பான உறவினர், நண்பர்கள் வீடுகளுக்கு சென்று பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுவதோடு பாதுபாப்பாக அகன்று செல்வதற்குரிய வழிகள், நேரம் என்பன ஊடகங்களில் அறிவிக்கும் வரை வெளியே செல்லாமல் அவதானத்துடனும் பொறுமையாகவும் வீட்டினுள் இருக்குமாறு வேண்டிக்கொள்ளப்படுகின்றனர்.



