இலங்கையில் மதங்களுக்கிடையிலான செயற்திறன் மிக்க இணக்கப்பாட்டிற்காக சிவில் சமூகம் மற்றும் அரசாங்க அதிகாரிகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல் - 2021.03.10

சமூக முறண்பாடுகள் மற்றும் பல்வேறுபட்ட பிரச்சினைகள் அனைத்திற்கும் மக்களுக்கு இடையேயான புரிந்துணர்வின்மையே காரணமாகும். புரிந்துணர்வொன்று ஏற்படுத்தப்படுமிடத்து பிரச்சினைகளற்ற சமுதாயத்தினை நாம் உருவாக்க முடியும். மதங்கள், இனங்களுக்கிடையேயான ஒரு நல்லிணக்க தொடர்பொன்று இருக்குமேயானால் நாட்டில் கலவரங்கள், முறண்பாடுகள் ஏற்படாமல் ஒற்றுமையான ஒரு வாழ்வை மக்கள் வாழ்ந்திட முடியும்.
சமூகங்களுக்கிடையே ஒரு புரிந்துணர்வையும் சமூக மக்களுக்கிடையேயான ஒரு நல்லிணக்கத்தினையும் ஏற்படுத்த கிராமங்கள் தோறும் நல்லிணக்க செயற்பாடுகளை மேற்கொள்ள பல சங்கங்கள் செயற்பட்டு வருகின்றன. ஒற்றுமையான சமூகமொன்று உருவாக வேண்டும் எனவும் இன,மத பேதமின்றி மனிதனை மனிதன் மனிதாபிமான முறையில் மதித்து செயற்பட வேண்டும் என்பதனை மையப்படுத்தியதான செயற்பாடுகளை அச் சங்கங்கள் முன்னெடுத்து வருகின்றன.
அந்த வகையில் கிராமங்களிலே செயற்பட்டு வருகின்ற சகவாழ்வு சங்கங்களின் செயற்பாடும் முக்கியமானதொன்றாக அமைகின்றது. சகவாழ்வு சங்கங்களின் அபிவிருத்தி வேலைத்திட்டம் மற்றும் இலங்கையில் மதங்களுக்கிடையிலான செயற்திறன் மிக்க இணக்கப்பாட்டிற்காக சிவில் சமூகம் மற்றும் அரசாங்க அதிகாரிகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல் இன்று(2021.03.10) எமது பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னம் தலைமையில் இடம்பெற்றது.

இக் கலந்துரையாடலில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர், ACTED நிறுவனத்தின் பிரதி திட்டமிடல் பணிப்பாளர் மற்றும் சகவாழ்வு சங்க உறுப்பினர்களும் பங்குபற்றினர்.

ACTED நிறுவனத்தின் பிரதி திட்டமிடல் பணிப்பாளரின் விரிவுரைகளோடு சகவாழ்வு சங்கங்களின் அபிவிருத்தி வேலைத்திட்டம் தொடர்பாகவும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற திட்டம் பற்றியதான முன்மொழிவுகளும் முன்வைக்கப்பட்டன.
சிவில் சமூகம் மற்றும் அரசாங்க அதிகாரிகளுக்கும் இடையிலான ஒற்றுமைகள் வலுப்படுத்தப்படும்போது மதங்களுக்கிடையிலான இணக்கப்பாட்டினை இலகுவில் அடைந்துகொள்ள முடியும். அந்த வகையில் ஒற்றுமையையும் இணக்கப்பாட்டினையும் வலுப்படுத்தும் நோக்கில் சகவாழ்வு சங்கங்கள் செயற்பட வேண்டியது அவசியமாகும்.










அரச சார்பற்ற நிறுவனங்களுடனான வேலைத்திட்டம், முன்னேற்றம் தொடர்பான மீளாய்வு கலந்துரையாடல் - 16.02.2021
அரச சார்பற்ற நிறுவனங்களுடனான வேலைத்திட்டம், முன்னேற்றம் தொடர்பான மீளாய்வு கலந்துரையாடல் - 16.02.2021

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கிராமங்களில் பல்வேறு வகையான பொதுமக்களுக்கு பயன் தரும் வகையிலான திட்டங்களை வடிவமைத்து செயற்படும் அரச சார்பற்ற நிறுவனங்களின் செயற்பாடுகள் தொடர்பான மீளாய்வு கலந்துரையாடலானது எமது பிரதேச செயலக ஒன்றுகூடல் மண்டபத்தில் பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னம் தலைமையில் 2021.02.16ம் திகதி இடம்பெற்றது.
இந் நிகழ்வில் AMCOR, OXFARM, CERI, YGRO, WDF, PALM FOUNDATION, PUHALIDAM மற்றும் LIFT போன்ற அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், திட்டமிடல் பிரதி பணிப்பாளர், கிராம உத்தியோகத்தர்கள், எமது பிரதேச செயலக கிளைகளின் பிரதிநிதிகள், திட்டமிடல் பிரிவு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.



பிரதேச செயலகங்களை பொறுத்தவரை அரச சார்பற்ற நிறுவனங்களது சமூகம் சார்ந்த பங்களிப்பு இன்றியமையாததாக காணப்படுவதோடு சுனாமி அனர்த்தத்தின் பின்னர் இந் நிறுவனங்களது பங்களிப்பு மாவட்ட மட்டத்தில் மிகவும் குறைவாகவும் குறிப்பாக எமது பிரதேச செயலக பிரிவில் மிகவும் குறைந்த அளவிலேயே காணப்படுகின்றது.
ஒவ்வொரு நிறுவனங்களும் தங்களது திட்டங்களை முன் மொழிந்து அத்திட்டங்களினூடாக பொதுமக்கள் பெற்றுக் கொள்ளும் பயன்கள் மற்றும் அதன் முன்னேற்ற அறிக்கைகள் உள்ளிட்ட விடயங்களை தெளிவுபடுத்தினர்.
ஓவ்வொரு நிறுவனங்களும் எவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்கின்றன மற்றும் அவற்றின் அடைவு மட்டங்கள் எவ்வாறு காணப்படுகின்றது என்பது தொடர்பான கருத்து முன் மொழிவுகளும் இங்கு ஆராயப்பட்டன. கருத்திட்டங்களினூடாக பொதுமக்களுக்கு நடாத்தப்படுகின்ற பயிற்சிகள் மற்றும் அவற்றின் முன்னேற்றங்கள் பற்றியதான கலந்துரையாடலும் இடம்பெற்றது.
அரச சார்பற்ற நிறுவனங்கள் தற்போது முன்னெடுக்கின்ற வேலைத்திட்டங்கள் யாவை? அவற்றின் கால இடைவெளிகள் மற்றும் அவற்றின் மூலம் பயன் பெறும் பொதுமக்கள், குடும்பங்களின் எண்ணிக்கை, கடந்தகால திட்டங்களினூடாக பயன்பெற்ற குடும்பங்களின் தற்போதைய நிலை எவ்வாறு காணப்படுகின்றது போன்றதான கருத்து பரிமாற்றங்கள் நிறுவனங்களின் பிரதிநிதிகளினால் தெளிவுபடுத்தப்பட்டன.


அரசானது பொதுமக்களின் பொருளாதாரத்தினையும் அவர்களது வாழ்க்கைத்தரத்தினையும் அபிவிருத்தி செய்வதற்காக முன்னெடுக்கும் செயற்திட்டங்கள் போன்று அரச சார்பற்ற நிறுவனங்களும் பொதுமக்களின் பொருளாதாரத்தினையும் அவர்களது வாழ்க்கைத்தரத்தினையும் அபிவிருத்தி செய்வதற்காக முன்னெடுக்கும் செயற்திட்டங்கள் பாராட்டப்பட வேண்டியவையாகும். அச் செயற்திட்டங்கள் உரிய வகையில் பொதுமக்களிடம் கொண்டு செல்லப்பட்டு அதனூடாக கிடைக்கின்ற பயன்களை முழுமையாக அடையவைப்பது எமது கடமையாகும்.
பொது மக்களுக்கு பயன் தரும் வகையில் அமையப்பெறும் செயற்திட்டங்களை பிரதேச செயலாளர் வரவேற்றதோடு அவற்றின் பயனை பிரதேச செயலகத்தில் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தராக செயற்படும் உத்தியேகத்தர்கள் அனைவரும் பொதுமக்களுக்கு பெற்றுக்கொடுக்க வேண்டியதான செயற்பாடுகளில் ஈடுபட வேண்டுமெனவும் கருத்து தெரிவித்தார்.
ஒரு லட்சம் வேலைவாய்ப்பு நிகழ்ச்சி திட்டத்திற்கு உள்வாங்கப்படுபவர்களுக்கான நேர்முக தேர்வு - 2021.03.03

அதிமேதகு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவின் நாட்டை கட்டியெழுப்பும் "சுபீட்சத்தின் நோக்கு" எண்ணக்கருவிற்கு அமைய பல்நோக்கு அபிவிருத்தி செயலணி திணைக்களத்தின் கீழ் ஒரு லட்சம் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ்மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக பிரிவில் உள்வாங்கப்படவிருக்கும் குறைந்த வருமானத்தை ஈட்டுகின்ற குடும்பத்தினை கொண்ட நபர்களினை தெரிவு செய்வதற்கான (3ம் கட்டமான) நேர்முக தேர்வானது இன்று பிரதேச செயலக ஒன்றுகூடல் மண்டபத்தில் பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னம் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இந் நேர்முகத்தேர்வில் உதவிப் பிரதேச செயலாளர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர், நிருவாக உத்தியோகத்தர், சமூக சேவை உத்தியோகத்தர் மற்றும் கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் போன்றோர் நேர்முக தேர்வாளர்களாக பங்கு பற்றினர்.


எமது பிரதேச செயலக பிரிவில் விண்ணப்பித்த 32 விண்ணப்பதாரிகள் நேர்முக தேர்வுக்கு உட்படுத்தப்பட்டனர் . குறைந்த வருமானத்தினை ஈட்டுகின்ற குடும்பத்தை சேர்ந்தவர்கள் பொருளாதார ரீதியில் ஒரு முன்னேற்றகரமான நிலையினை அடைந்து தமது வாழ்க்கைத்தரத்தினை உயர்த்திக் கொள்ள வேண்டுமென்பதினை மையப்படுத்தி தொழில் தேடுநர்களாக தொழிலொன்றினை எதிர்பார்த்து காத்திருக்கும் இளைஞர்களுக்கு பயன்தரும் திட்டமாக ஜனாதிபதியின் இத் திட்டம் அமைகிறது.
வருமானம் ஒன்று வாழ்க்கைத்தரத்தின் மேம்பாட்டிற்கான ஒரு ஆதாரமாக அமைகின்றது. வருமானமின்மை காரணமாகவே குடும்பங்கள் பல்வேறான பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலை ஏற்படுகின்றது. நிரந்தர வருமானமொன்றினை குடும்பமொன்று ஈட்டிக்கொள்ளும் சந்தர்ப்பத்தில் அக் குடும்பமானது ஒரு பொருளாதார முன்னேற்றத்தினை எட்டமுடியும்.
நேர்முக தேர்வில் பங்குபற்றிய விண்ணப்பதாரிகளின் தகமைகள் மற்றும் அவர்களது குடும்பப் பின்னணி பரிசீலிக்கப்பட்டதோடு அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தொழிற்துறை சார் விளக்கங்களும் அவர்களுக்கு வழங்கப்பட்டது.


இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் 73வது சுதந்திர தின கொண்டாட்டம் - 2021.02.04

பிரித்தானிய காலனித்துவத்திலிருந்து இலங்கை திருநாடு சுதந்திரம் பெற்று அந்நிய ஆட்சியைத் தவிர்த்து தம்மைத் தாமே ஆளத்தொடங்கி இன்றுடன் 73 ஆண்டுகள். “சுபீட்சமான எதிர்காலம் சௌபாக்கியமான தாய்நாடு” எனும் தொனிப்பொருளில் நாடளாவிய ரீதியில் அனைத்து அரச நிறுவனங்களிலும் இன்று சுதந்திர தின நிகழ்வுகள் நடைபெறுகின்றன.
அந்த வகையில் எமது நாட்டின் 73வது சுதந்திரத்தினை கொண்டாடும் முகமாக ஒழுங்கு செய்யப்பட்ட நிகழ்வானது இன்று(2021.02.04) எமது பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னம் தலைமையில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் பதவி நிலை உத்தியோகத்தர்கள் மற்றும் அலுவலக உத்தியோகத்தர்கள் அனைவரும் பங்குபற்றியிருந்தனர். மு.ப 8.00 மணியளவில் தேசிய கொடியேற்றப்பட்டதோடு தேசிய கீதமும் இசைக்கப்பட்டு நிகழ்வு ஆரம்பமானது.






அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் வழிகாட்டலிலே “வளமான நாடும் சுபீட்சமான எதிர்காலமும்” எனும் தொனிப் பொருளில் அமையப் பெற்ற சுதந்திர தின வைபவத்திலே பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னம் அவர்கள் உரையாற்றுகையில்...


எமது நாடானது சகல வளங்களையும் கொண்டமைந்த நாடாகும் எமது வளங்களை பயன்படுத்தி ஒரு சுபீட்சமான எதிர்காலத்தினை எம்மால் உருவாக்கிக் கொள்ள முடியும். அரச சேவையானது அவ்வாறானதொரு சுபீட்சமான எதிர்காலத்தினை நோக்கியதான ஒரு சேவையாக அமையப்பெறல் வேண்டும். அந்த வகையில் அரச ஊழியர்களாகிய நாம் அர்ப்பணிப்புடனும் பொறுப்புடனும் வினைத்திறனுடனும் பொதுமக்களுக்கான சேவையினை நாம் வழங்கவேண்டும்.
மக்களுக்கான சேவையினை வழங்கி அவர்களினை வழிநடத்தி அவர்களுக்கான சிறந்ததொரு சௌபாக்கியமான சுபீட்சமான ஒரு எதிர்காலத்தினை உருவாக்கிக் கொடுக்கும் ஒரு பாரிய பொறுப்பு அரச ஊழியர்களாகிய நம் ஒவ்வொருவருக்கும் வழங்கப்பட்டுள்ளது. ஆகவே நாம் அனைவரும் மக்களின் பொறுப்பாளர்களாவோம் மக்களுக்கான சிறந்த சேவையினை வழங்கி வழிநடத்தும் வழிகாட்டிகளாவோம். எனவே பொறுப்புடனும் ஆற்றலுடனும் வினைத்திறனானதொரு சேவையினை நாம் மக்களுக்கு வழங்க வேண்டியது அவசியமாகும்.
ஒவ்வொரு அரச ஊழியர்களும் தமக்கான மக்களுக்கான சேவைக் கடமைப்பொறுப்புக்களை செவ்வனே நிறைவேற்றுவார்களேயானால் மக்களின் பொருளாதாரமும் அவர்களது வாழ்வாதாரமும் சிறந்ததொரு சுபீட்சமான எதிர்காலத்தை நோக்கி நகர்த்தப்படும் என்பதில் ஐயமில்லை. எனவே இச் சுதந்திர தின வைபவத்திலே நாம் அனைவரும் பொறுப்புடனும் சேவை மனப்பாங்குடனும் வினைத்திறனானதொரு சேவையினை மக்களுக்கு வழங்கவேண்டும் என்ற எண்ணப்பாட்டினை வலுப்படுத்திக் கொள்வோம் என தனது கருத்து மொழிவினை முன்வைத்திருந்தார்.

சுதந்திர தின வைபவத்தோடு இச் சுதந்திர தினத்திலே பொது நிருவாக அமைச்சின் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டதற்கு அமைவான “துன் பொக்குறு யோகய” எனும் தொனிப் பொருளில் அமைந்த மரநடுகை நிகழ்வும் காலை 9.29 மணியளவில் எமது பிரதேச செயலக வாளாகத்தில் இடம்பெற்றது. எமது நாட்டின் தேசிய மரமான நாகமரம் (Mesua nagassarium) எமது பிரதேச செயலக முன்றலில் நடப்பட்டதுடன் எமது பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட 45 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்கும் மரங்கள் வழங்கப்பட்டு அப் பிரிவுகளிலும் இம் மரநடுகை நிகழ்வு இடம்பெற்றது. அத்தோடு பிரதேச செயலக வளாகத்தில் பாரியதொரு சிரமதான நிகழ்வும் உத்தியோகத்தர்களினால் முன்னெடுக்கப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.











