COVID 19 சம்பந்தமான அவசர தீர்மானங்களை மேற்கொள்ளும் கலந்துரையாடல் - 2020.11.27

நாட்டில் ஏற்பட்டுள்ள COVID 19 தொற்றானது இன்றைய நிலையில் மிக அபாயமானதொன்றாக காணப்படுகின்றது. நேற்றைய தினம் அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்று, கல்முனை, அட்டாளைச்சேனை போன்ற பிரதேசங்களில் COVID 19 தொற்றின் அபாயம் அதிகரித்துள்ளமையானது அப் பிரதேசங்களுக்கு அருகாமையிலுள்ள எமது பிரதேச செயலகப் பிரிவுக்கும் பாரியதொரு அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது.
"COVID 19 தொற்றிலிருந்து எம்மையும் எமது சமூகத்தினையும் பாதுகாக்க நாம் துரிதமாக செயற்பட வேண்டிய தேவையுள்ளது" என்பதினை மையப்படுத்தியதான அவசரகால தீர்மானங்களை மேற்கொள்ளும் கலந்துரையாடலானது இன்று (2020.11.27) எமது பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
இக் கலந்துரையாடலில் களுவாஞ்சிகுடி பொலிஸ் பொறுப்பதிகாரி, வலயக்கல்வி அலுவலக ADE, சுகாதர வைத்திய அலுவலக AMOH, SPHI, களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலை அலுவலக MS, இராணுவ பொறுப்பதிகாரி மற்றும் சமூக சேவை உத்தியோகத்தர், அனர்த்த நிவாரண சேவை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது COVID 19 தொற்றிலிருந்து எம்மையும் எமது சமூகத்தினையும் பாதுகாக்க இறுக்கமான நடைமுறைகளை பின்பற்றியாவது எமது பாதுகாப்பை நாம் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். இதற்கு எவ்வாறான முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும் அவற்றினை எவ்வாறு நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கலந்துரையாடலோடு பொதுமக்களின் பாதுகாப்பு கருதி கீழ் வரும் தீர்மானங்கள் உடன் நடைமுறைக்கு வரும்படி இன்றிலிருந்து (27.11.2020) நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற தீர்மானம் எடுக்கப்பட்டது.
தீர்மானங்கள்.......
- களுவாஞ்சிகுடி பொதுச் சந்தையினை இன்றிலிருந்து (2020.11.27) ஒருவார காலத்திற்கு மூடப்படல் வேண்டும்.
- திறந்த வெளியிலான ஒரு சுகாதர நடைமுறையுடன் கூடிய ஒரு சந்தை நடவடிக்கையினை மேற்கொள்ளல்.
- பிரத்தியேக வகுப்புகளை நடாத்துவதை தடை செய்யயுமாறும் பணிக்கப்பட்டது.
- அம்பாறை மாவட்ட பகுதியிலிருந்து வந்து மேற்கொள்ளப்படும் அனைத்து வியாபார நடவடிக்கைகளையும் தடைசெய்தல்.
- எமது பிரதேச செயலகத்திலிருந்து அம்பாறை மாவட்ட பகுதி பிரதேசங்களுக்கு சென்று வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்வதை தற்கலிகமாக தடை செய்தல்.
- பாடசாலைகளில் மாணவர்களும் ஆசிரியர்களும் சுகாதார நடவடிக்கைகளை முறையாக பின்பற்றி செயற்படுவதன் அவசியம் தெளிவுபடுத்தப்பட்டதோடு அவற்றினை கண்காணிப்பதற்குரிய ஏற்பாடுகளும் வலுப்படுத்தப்பட்டன.
- ஆலயங்கள், திருமண, மரண வீடுகள் மற்றும் ஏனைய விசேட நிகழ்வுகளின் போதான சமூக கூட்டங்களை ஒரு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் அனுமதிப்பதோடு அனைவரும் சுகாதார நடவடிக்கைகளை பின்பற்றி செயற்படுகின்றார்களா என்பதினை அவதானிக்கும் பொறுப்பான உத்தியோகத்தர்கள் மக்களின் பாதுகாப்பு கருதி இறுக்கமாக செயற்பட வேண்டும் என பணிக்கப்பட்டது.
- அம்பாறை மாவட்டத்திலிருந்து எமது பிரதேச செயலக பிரிவு நிறுவனங்களுக்கு வரும் அனைத்து உத்தியோகத்தர்களும் வீட்டிலிருந்து பணியாற்றுவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள பணிக்குமாறும் தீர்மானம் எடுக்கப்பட்டது.
- தனிமைப்படுத்தலுக்கு உள்ளான குடும்பங்கள் மிகவும் பாதுகாப்பாக தங்களது இல்லத்தை விட்டு வெளிச்செல்வதை முற்றாக தடுப்பதற்குரிய நடவடிக்கை மேற்கொள்ள பணிக்கப்பட்டதுடன் அவர்களுக்கான தேவைகள் பூர்த்தி செய்யப்படல் வேண்டும் எனவும் உரிய பெறுப்பதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.
- கல்லாறு பாலத்தினூடாக எமது பிரதேசத்திற்குள் உள்நுழைகின்ற வாகனங்கள் அனைத்தும் பரிசோதிக்கப்படல் வேண்டும் என்பதோடு தேவையற்ற காரணங்களுக்கான போக்குவரத்தினை தடை செய்வதற்குரிய நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படல் வேண்டும்.
போன்ற மக்களை COVID 19 தொற்றிலிருந்து பாதுகாக்கும் விசேட தீர்மனங்கள் எடுக்கப்பட்டன.



