பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற 2020ஆம் ஆண்டிற்கான வேலை ஆரம்ப நிகழ்வுகள் 2020.01.01
மலர்ந்திருக்கும் 2020ஆம் ஆண்டினை வரவேற்று அலுவலக கடைமைகளை ஆரம்பிக்கும் முகமாக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னம் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது பிரதேச செயலாளரினால் தேசியக்கொடி ஏற்றப்பட்டதை தொடர்ந்து தேசியகீதம் இசைக்கப்பட்டு உத்தியோகத்தர்களினால் அரசாங்க சேவை சத்தியப்பிரமாணம் மேற்கொள்ளப்பட்டது.
மேலும் புதுவருட ஒன்றுகூடலின் போது தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தினால் அரச நிறுவனங்களிடையே நடாத்தப்பட்ட போட்டியில் 3ம் இடத்தினை மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகம் பெற்றுக்கொண்டமைக்காக அதற்காக அயராது பாடுபட்ட உத்தியோகத்தர்கள் மற்றும் கிளைகளை பாராட்டும் வைபவம், தாங்கள் ஆற்றிய சேவைகளுக்காக மாதாந்தம் தெரிவு செய்யப்பட்ட உத்தியோகத்தர்களை பாராட்டும் வைபவம், சமூக பாதுகாப்பு நிதித் திட்டத்தில் அதிக பயனாளிகளை இணைப்பு செய்தவர்களை பாராட்டும் வைபவம் என்பன பிரதேச செயலாளரின் தலைமையில் இடம்பெற்றது.
புதுவருட கடைமைகளை ஆரம்பிக்கும் பொருட்டு ' விசேட மரநடுகை வேலைத்திட்டமானது இன்றைய தினம் ஆரம்பித்துவைக்கப்பட்டது.

மண்
முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக கலாசார விழாவானது 23.10.2018ம் திகதி செவ்வாய்கிழமை பி.ப 2.00 மணியளவில் களுதாவளை கலாசார மண்டபத்தில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரெத்தினம் தலைமையில் ஆரம்பமாகியது.
இக் கலாசார விழாவிற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமாரும் சிறப்பு அதிதியாக மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை தவிசாளர் ஞா.யோகநாதனும் கௌரவ அதிதிகளாக வைத்திய அத்தியட்சகர் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலை வைத்திய கலாநிதி கு.சுகுணன் மற்றும் சிரேஸ்ர விரிவுரையாளர் கலாநிதி ஞா.தில்லைநாதனும் கலந்துகொண்டனர்.
அந்த வகையில் களுதாவளை கல்லடிப்பிள்ளையார் ஆலயத்தில் இருந்து தேற்றாதீவு தேனுகா கலைக் கழகத்தின் தமிழ் கலாசார வாத்திய குழுவினர் அதிதிகளை வரவேற்றலுடன் விழா ஆரம்பமாகியது. இதன்போது தமிழ்தாய் வாழ்த்தினை திருவருள் நுன்கலை மன்றமும், கலாசார கீதத்தை தேனுகா கலைக்கழகத்தினாலும் இசைக்கப்பட்டதுடன் வரவேற்புரையை உதவிப் பிரதேச செயலாளர் திருமதி சத்தியகௌரி தரணிதரன் நிகழ்த்தியதுடன் வரவேற்பு நடனத்தினை பட்டிருப்பு தேசிய பாடசாலை மாணவர்கள் நிகழ்த்தினர்.
இவ் விழாவின் தலைமை உரையை பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரெத்தினம் நிகழ்த்தி வைத்தார். கிராமிய இசையை களுதாவளை மகா வித்தியாலய மாணவிகளும் குறவன் குறத்தி நடனத்தினை களுதாவளை நிருத்திய கலா மன்ற மாணவியரும் ஆற்றுகைப் படுத்தினர். எழுவான் சிறப்பு மலரினை பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரெத்தினம் முதல் பிரதியினை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமரிடம் கையளித்தார்.
இதன் போது மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகப் பிரிவில் உள்ள மூத்த, இளம் கலைஞர்கள் கௌரவிக்கப்பட்டனர். அத்துடன் மண்முனை தென் எருவில் பற்று கலாசாரப் பேரவையால் நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள், கலைஞர்கள் கௌரவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்க விடயம்.


“பசுமையானதொரு தேசம்”தேசிய வீட்டுத்தோட்டப் பயிர்ச் செய்கை புரட்சி - 2022 ஆரம்ப நிகழ்வு
நாட்டில் வீட்டுத் தோட்டத்தை மக்களிடையே மேம்படுத்தி பசுமையானதொரு தேசத்தை உருவாக்கும் தேசிய வேலைத்திட்டமானது 29.03.2022 அன்று காலை 9.18 சுபநேரத்தில் நாடுபூராவும் சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. மண்முனை தென் எருவில் பற்று களுவாஞ்சிகுடி பிரதேச செயலகப் பிரிவின் " பசுமையானதொரு தேசம் " ஆரம்ப நிகழ்வு பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னம் அவர்களின் தலைமையில் எருவில் கிழக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவில் மு.ப 09.18 மணியளவில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அரசாங்கத்தின் கொள்கையின் அடிப்படையில் கமத்தொழில் அமைச்சு உட்பட 8 அமைச்சுக்களின் ஒருங்கிணைப்பு மற்றும் ஆலோசனையின் அடிப்படையில் ஜனாதிபதி செயலகத்தின் மேற்பார்வையின் கீழ் இடம்பெறும் மேற்படி தேசிய வேலைத்திட்டத்திற்காக களுவாஞ்சிகுடி பிரதேச செயலக பிரிவிலிருந்து 4430 வீட்டுத்தோட்ட பயனாளிகள் இத்திட்டத்திற்காக தெரிவுசெய்யப்பட்டுள்ளதோடு , 70 சமூகமட்ட மாதிரி வீட்டுத்தோட்டங்கள் அமைப்பதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினரும் பிரதேச ஒருங்கிணைப்பு தலைவருமான கெளரவ சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் இணைப்பாளர் திரு தஜீவரன், மாவட்ட செயலக உள்ளக கணக்காளர் திருமதி காயத்திரி ரமேஷ், உதவி பிரதேச செயலாளர் திருமதி சத்தியகௌரி தரணிதரன், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.நிர்மல்ராஜ், சமுர்த்தி தலைமையக முகாமையாளர் திருமதி புவனேஸ்வரி ஜீவகுமார் , சமுர்த்தி முகாமைத்துவப் பணிப்பாளர் திரு கே.உதயகுமார் ,மாவட்ட சமுர்த்தி திணைக்களத்தின் சிரேஸ்ட முகாமையாளர் திரு எஸ்.தயாபரன், கருத்திட்ட முகாமையாளர் எஸ்.தமிழ்வாணி,சமுர்த்தி வங்கிகளின் முகாமையாளர்கள் , பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் விவசாய போதனாசிரியர்கள், ஆலய தலைவர், சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பு உறுப்பினர்கள், சமுர்த்தி பயனுகரிகள் எனப் பலரும் கலந்து கொண்டதோடு தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்கான நாற்றுகளும் வழங்கி வைக்கப்பட்டது.





2019ம் ஆண்டு அரச புதிய கடமைகளை சத்தியப்பிரமாணம் செய்து பொறுப்பேற்கும் விசேட நிகழ்வு 01.01.2018ம் திகதி செவ்வாய்க்கிழமை காலை மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது.
பிரதேச செயலாளர் சிவப்பிரியா வில்வரத்னம் தலைமையில் தேசிய கொடியேற்றலுடன் ஆரம்பமான இந் நிகழ்வின் போது நாட்டுக்காக உயிர் நீத்த படைவீரர்கள், அரச பணியாளர்களுக்கென இருநிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து காரியாலய அரச சேவையாளர்கள்சத்தியப்பிரமாண உறுதிமொழி எடுத்துக்கொள்ளும் நிகழ்வு நடைபெற்று பிரதேச செயலாளரின் புத்தாண்டுச் செய்தி உரை இடம்பெற்றது.
இந் நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர் சிவலிங்கம் சத்தியகௌரி மற்றும் பதவிநிலை உத்தியோகத்தர்கள் உட்பட பிரதேச செயலகத்தின் உத்தியோகத்தர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.


இயற்கை அனர்த்தங்களுக்கெல்லாம் காரணம் மனிதர்களால் இயற்கைச் சமநிலையைக் குழப்புகின்ற வகையில் மேற்கொள்ளப்படுகின்ற செயற்பாடுகள்தான் பேரழிவுக்குக் காரணமாய் அமைகின்றன எனவே நாம் அனைவரும் இயற்கையைப் பாதுகாக்கின்ற கடப்பாட்டில் இருக்கின்றோம். மரங்களை வளர்ப்பது, காடுகளை அழிக்காது பாதுகாப்பது, உட்கட்டுமானங்களை இயற்கைக்கு ஏற்றவகையில் அமைப்பது, பயிர்ச்செய்கைகளை மேற்கொள்வது போன்றவற்றில் அதிகூடிய அக்கறை செலுத்தவேண்டிய கடப்பாடு எமக்கு இருக்கின்றன. என மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னம் தெரிவித்துள்ளார்.
மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்தில் 26.12.2018 புதன்கிழமை காலை நடைபெற்ற தேசிய பாதுகாப்பு தின நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில் இயற்கை அனர்த்தங்களால் உயிர்களுக்கும் சொத்துக்களுக்கும் ஏற்படுகின்ற இழப்புக்கள் மிகவும் பாரதூரமானவையாகும். இவை தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வூட்டி முன்கூட்டியே அவர்களுக்கான உபாயங்களை வழங்கி பாதுகாப்பு வழங்குவது பிரதேச செயலகத்தின் ஒவ்வோரு உத்தியோகத்தர்களதும் சமுதாயம் சார் கடப்பாடாகும்.
பிரதேச செயலகத்திலுள்ள அனைத்து உத்தியோகத்தர்களும், பிரதானமாக கிராமசேவை உத்தியோகத்தர்கள் கிராமங்களிலே ஏற்படுகின்ற அனர்த்தங்களுக்கு ஈடுகொடுப்பது , முகங்கொடுப்பது போன்ற விடயங்களுக்கு மிகவும் காத்திரமானவர்களாக இருக்கின்றார்கள். இவற்றுக்கு மேலாக அனர்த்தம் என்று வரும்போதுஅனைத்து உத்தியோகத்தர்களும் ஒன்றினைந்து பிரதேச மக்களை பாதுகாத்து காப்பாற்ற வேண்டியது எமது கடப்பாடாகும் என அவர் இதன்போது தெரிவித்தார். இந் நிகழ்வின் போது தேசியக்கொடி ஏற்றப்பட்டு 2004ம் ஆண்டு ஏற்பட்ட ஆழிப்பேரலை அனர்த்தத்தில் உயிர் நீத்த அனைவருக்குமான ஆத்ம சாந்தி வேண்டி இரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் பிரதேச செயலகத்தில் கடமைபுரிகின்ற அனைத்து அரச உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டிருந்தனர்.





